
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அரசுடைமையாக்க கோரி மட்டக்களப்பில் மாபெரும் மக்கள் பேரணி இடம்பெற்றது.
அதுரலிய ரத்ன தேரர் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இந்த பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கோட்டைமுனை இந்துக்கல்லூரி விளையாட்டுக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவரையில் நடைபெற்ற இந்த பேரணியை தொடர்ந்து காந்திபூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டமும் நடாத்தப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரச உடைமையாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
அத்துடன் குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக முறையான விசாரணைகள் செய்யப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.