
அரசியல் களத்தில் ரஜினிகாந்துடன், கமல் இணையும் சாத்தியம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய பத்திரிகை ஒன்றின் பேட்டியில் கமல், ரஜினி இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள மகேந்திரன்,
“எமது கட்சித் தலைவர் கமலுக்கும் ரஜினிக்கும் நல்ல நட்பும் தோழமையும் உண்டு. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை அவருடன் கூட்டணி வைக்கப்படுமா என்பதை காலமும் தலைவரும் தான் முடிவு செய்யவேண்டும். இதுதவிர, கூட்டணி விடயத்தால் எங்கள் தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆகவே, கூட்டணி பற்றி நாங்கள் அவசரப்பட மாட்டோம். தேசியக் கட்சிகள் விடயத்திலும் எங்கள் நிலைப்பாடு இதுதான்” என்று அவர் கூறினார்.
திரைத்துறையில் நண்பர்களாக இருந்துவந்த ரஜினியும் கமலும் அரசியலில் தனித்தனியாக செயற்பட்டு வருகின்றனர். இருவரது கொள்கைகளும் மாறுபட்டு இருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டு சுமார் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். 4 தொகுதிகளில் ஒரு இலட்சம் வாக்குகளை கடந்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலுக்கு உற்சாகமாக தயாராகி வருகிறார். ரஜினியும் சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து கட்சிப் பணிகளில் இறங்கியுள்ளார்.
அரசியல் களத்தில் இருவரும் இணைந்து செயற்பட்டால் பெரிய வெற்றி பெறலாம் என்று கணிப்புகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது