
கொழும்பை அண்மித்துள்ள ஜா – எல பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று, அச்சிறுமியுடன் குடும்பம் நடத்திவந்த இளைஞன் கைதானார்.
இந்த சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ள நிக்கவெரட்டிய பொலிஸார், அவரை நிக்கவெரட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குறித்த இளைஞன், ஜா – எல பிரதேசத்தில் தொழில் புரிந்துகொண்டிருந்த போது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதன்பின்னர், குறித்த சிறுமியை ஏமாற்றி நிக்கவெரட்டியவில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளதுடன், அங்கு சிறுமியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதன்காரணமாக, குறித்த சிறுமி தனது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த இளைஞரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.