
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக எதிர் காலத்தில் சிறப்பான முடிவொன்று எடுக்கப்படும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக தற்போது அதிகமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதற்கு சில காலங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடாகும்.
எனவே, இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவொரு பிளவும் ஏற்படவில்லை. 2020 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் எமது கட்சி வலுவடையும்.
எனவே, பொறுமையாக இருக்குமாறு நான் அனைத்துத் தரப்பிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.