
தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தாக்கல் செய்த முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த முன் பிணை மனுவினை தலைமை நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார்.
தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முன் பிணை மனுவை நேற்று இரவு தாக்கல் செய்தார்.
வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த இரு சந்தேகநபர்களும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ராஜித சேனாரட்ன கோரியதற்கிணங்கவே வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, இரண்டு சந்தேகநபர்களும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வெள்ளைவான் கடத்தல் விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று இரவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன முன் பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.