
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாகைகள், கட் அவுட்கள் உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களையும் அகற்றுவதற்குரிய கால அவகாசம் நிறைவடையவுள்ளது.
இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் இந்த கால அவகாசம் நிறைவடையவுள்ளதாக தேசிய தேர்தல்கள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விளம்பரங்களை அகற்றாத நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில், ஒழுக்கமாக செயற்பாடுவார்கள் என நம்புகின்றேன்.
தேர்தல் அலுவலகங்களை நடாத்திச் செல்ல முடியாது, அலுவலகங்கள் இருந்தால் பரவாயில்லை, ஆனால் கட் அவுட், உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.
மாவட்ட ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட அலுவலகங்களை தொடர்ந்து நடத்திச் செல்ல முடியும். ஆனால் அந்த அலுவலகங்கள், வாக்களிப்பு நிலையத்திற்கு 500 மீற்றர் தூரத்திற்குள் அமைந்திருக்கும் பட்சத்தில் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள் நீக்கப்பட வேண்டும்.
2500 இற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் உள்ளன. இம்முறை தேர்தலுக்கான செலவு 700 முதல் 750 கோடி ரூபாய் வரை அமையும் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
ஆனால் அந்த தொகை, மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்